அஜ்மான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – ஒரு தன்மைமாற்றும் அண்டைப்புற முயற்சி அஜ்மானில் வேரூன்றி வருகிறது. பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களில் பங்கேற்று வருவதால் உத்வேகம் பெற்ற ஒரு இளைஞர் குழுவினர், ஒரு காலத்தில் பயன்படுத்தப்படாத ஒரு நிலத்தை ஒரு செழிப்பான சமூகத் தோட்டமாக மாற்றியுள்ளனர்.
“இந்தத் திட்டம் நமது சுற்றுச்சூழலை அழகுபடுத்துவதற்கான ஒரு முயற்சியை விட மேலானது — இது சமூக சேவை மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு துடிப்பான வெளிப்பாடு” என அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சனா ரெய்ஹானி கூறினார்.
சமுதாய தன்மைமாற்றம் குறித்த பஹாய் போதனைகளை தங்கள் அண்டைப்புறத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தால் உந்தப்பட்ட இந்த இளைஞர்கள், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட குடியிருப்பாளர்களிடையே சமூக உணர்வு மற்றும் உடனுழைப்பின் ஆழமான உணர்வைப் பேணி வளர்க்கும் அதே வேளையில், தங்கள் பௌதீகச் சுற்றுப்புறங்களை மேம்படுத்துகின்றனர்.
அண்டைப்புற குடியிருப்பாளர்கள் தோட்டத் திட்டத்தில் ஒன்றாகப் பணிபுரிகின்றனர்.
கூட்டு நனவுணர்வு மற்றும் கடப்பாட்டைப் பேணி வளர்ப்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து, பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிடுவதன் மூலம் இளைஞர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கினர். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், சுற்றுச்சூழல் மேற்பார்வை மற்றும் தோட்டத்தின் நன்மைகள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் இணைய தளங்களைப் பயன்படுத்தினர், மற்றும் அனைத்து அண்டைப்புற குடியிருப்பாளர்களையும் இந்த முயற்சியில் சேர்ந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.
பதில் உற்சாகமூட்டுவதாக இருந்தது. சேவை செய்வதில் அந்த இளைஞரின் அர்ப்பணிப்பைக் கண்டு அக்கம்பக்கத்தார் உந்தப்பட்டு, தங்கள் ஆதரவை வழங்க முன்வந்தனர். அவர்களுள் ஓர் அனுபவமிக்க விவசாயி தாமும் பங்களிக்க தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்: “எங்கள் சுற்றுப்புறம் செழிப்புற அவர்களுக்கு அதரவளித்து பயனுள்ள விவசாய நடைமுறைகளை கற்பிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.”
குழுவினரின் வழிநடத்துனரான அய்மான் ரோஹானியான், திட்டத்தின் விரிவான தாக்கங்களைப் பற்றி பிரதிபலித்தார்: “இந்த முயற்சி எங்கள் உள்ளூர் சூழலின் அம்சங்களை புத்துயிர்பெறச் செய்துள்ளது மற்றும் சமூக உறுப்பினர்களிடையே உடனுழைப்பதற்கும் தங்கள் சொந்த குடும்பங்களுக்கு அப்பால் தங்கள் அக்கறையை விரிவுபடுத்துவதற்குமான கடமை உணர்வை ஊக்குவித்துள்ளது.”
இந்த திட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மிதமான முயற்சிகளிலிருந்து புதிய பரஸ்பரமான வடிவமுறைகள் எவ்வாறு உருவாக முடியும் என்பதைக் கண்டறிந்தனர். “நம்முடைய சிறிய முயற்சிகள் கூட சமூகத்திற்குள் ஒற்றுமையையும் சேவை மனப்பான்மையையும் வளர்க்கும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என ஓர் இளைஞர் குறிப்பிட்டார். மற்றொருவர், “பூக்களை நடவு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை கவனித்துக்கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் இது எங்கள் அண்டைப்புறத்திலும் மகிழ்ச்சியை விதைக்கிறது.”
இந்த முயற்சியின் ஆழமான முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் சனா ரெய்ஹானி, “தனிநபரின் வளர்ச்சி சமூகத்தின் வளர்ச்சியுடன் எவ்வாறு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த முயற்சி அழகாக நிரூபிக்கின்றது, நம் சமூகத்தின் நலனுக்குப் பங்களிப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது.”
தோட்டம் ஒரு சமூக இடவெளியாக உருவாகியுள்ளது, இது அண்டைப்புறங்களிடையே அமைதியான தொடர்புகளைப் பேணி வளர்க்கிறது, அவர்கள் ஒன்றாகப் பேணி வளர்த்த பசுமையை கவனித்துக்கொள்ளவும் அனுபவிக்கவும் ஒன்றிணைகிறார்கள்.
அவர்கள் பணியின் பரந்த தாக்கத்தை உணர்ந்து, ஓர் இளைஞர் குறிப்பிட்டார், “நான் எனது அண்டைப்புறத்திற்கு மட்டுமல்ல, எனது நாட்டிற்கும் பங்களிக்கும் ஓர் இளம் விவசாயி என உணர்கிறேன்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1730/